சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக திருச்சியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக அங்குள்ள 120 ஆண்டுகளுக்கு மேலான பழமையான டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவதாக தகவல் பரவியதையடுத்து அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அவர்களைக் கட்டுப்படுத்த முடியாததைத் தொடர்ந்து, போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதை கண்டித்தும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு டி.வி.எஸ்.டோல்கேட் அருகே 1 மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஆவேசமடைந்த மாணவர்கள் சாலை ஓரத்தில் இருந்த பாஜக கொடி கம்பங்களை பிடிங்கி எறிந்து அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் நான்கு வழிச்சாலை சந்திப்பில், நான்கு புறமும் கைகோர்த்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாநகரக் காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர், பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த போராட்டத்தினால் டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம் பகுதிகளில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.