ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பஸ், ரயில் கட்டணங்களைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
மதுரையில் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் வியாழக்கிழமை பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சர்வதேசச் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆகவே மத்திய அரசு ரயில் கட்டணங்களை குறைப்பது அவசியம். அதேபோல அரசு பஸ்களின் கட்டணத்தை தமிழக அரசு குறைக்கவேண்டும். ஏழை எளிய மக்கள் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் போக்குவரத்து கட்டணத்தை குறைக்கமுன்வரவேண்டும்.
தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு ஏற்ப சீராக இல்லாமல் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்கிடவேண்டும். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தற்போது பரவிவருகிறது. ஆகவே மருத்துவர்கள் குழுவை அமைத்து அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டவேண்டும் என்றார்.
பேட்டியின்போது தமாகா மூத்த வழக்குரைஞர் பி.சேதுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.