மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைதண்டனை
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைதண்டனை வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கொடியாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(31). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் உள்ள எஸ்.குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த அஸ்வத்தப்பா மகள் சரஸ்வதி(23) என்பவருக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் விஜயகுமாருக்கு 15 பவுன் தங்க நகைகளை வரதட்சணையாக வழங்கினர். திருமணத்திற்கு பிறகு விஜயகுமார், மேலும் ரூ. 50 ஆயிரம் வரதட்சணை கேட்டு சரஸ்வதியை துன்புறுத்தி, வீட்டிலிருந்து வெளியேற்றினார். பின்னர் ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து சரஸ்வதியை கணவருடன் அனுப்பினர். அப்போது அஸ்வத்தப்பா தனக்கு சொந்தமான 3 செண்ட் பரப்பளவு நிலத்தையும் விஜயகுமார் பெயருக்கு எழுதி வைத்தார்.
இந்த நிலையில், மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவியை விஜயகுமார் கொடுமைபடுத்தியதால் மனமுடைந்த சரஸ்வரி, கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி சரஸ்வதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, விஜயகுமாரை கைது செய்தனர்.
Advertisement
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணையில் விஜயகுமாருக்கு பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், அபராதமாக ரூ. 70 ஆயிரம் செலுத்த வேண்டும் என நீதிபதி திருமகள் தீர்ப்பு வழங்கினார்.