திருநள்ளாறு வரை ரயில் சேவை : ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரைக்கால் வரை பயன்பாட்டில் உள்ள ரயில் சேவையை திருநள்ளாறு வரை முதல்கட்டமாக நீட்டிக்க ரயில்வே அமைச்சரை, புதுச்சேரி அரசு நிர்பந்திக்கவேண்டும். அவசர கதியில் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் இப்பிரச்னையை கையில் எடுத்து செயல்படவேண்டுமென காரைக்கால் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் வரை பயன்பாட்டில் உள்ள ரயில் சேவையை திருநள்ளாறு வரை முதல்கட்டமாக நீட்டிக்க ரயில்வே அமைச்சரை, புதுச்சேரி அரசு நிர்பந்திக்கவேண்டும். அவசர கதியில் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் இப்பிரச்னையை கையில் எடுத்து செயல்படவேண்டுமென காரைக்கால் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த 2011-ம் ஆண்டி டிசம்பர் மாதம் முதல் காரைக்கால் வரையிலான ரயில் சேவை தொடங்கப்பட்டது. நாகூர் முதல் காரைக்கால் வரை 10.5 கிலோ மீட்டர் தூரம் புதிய அகல ரயில்பாதை அமைத்து பயன்பாட்டில் இருந்துவருகிறது.
காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக 23 கிலோ மீட்டர் தூரம் உள்ள பேரளம் வரை புதிதாக அகல ரயில்பாதை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் - பேரளம் வரை இருந்த மீட்டர்கேஜ் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டது. சேவை நிறுத்தப்பட்டாலும் ரயில்வேயிடம் இதற்கான நிலம் அப்படியே இருக்கிறது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அவசியமில்லை.
இந்த புதிய திட்டத்துக்கு பட்ஜெட்டில் அறிவிக்கும்போது சுமார் ரூ.150 கோடி தேவையென தெரிவிக்கப்பட்டது. இப்போது ரூ.200 கோடி தேவையிருக்குமென கூறப்படுகிறது. காரைக்கால் - பேரளம் வரை புதுச்சேரி பகுதிகள், தமிழகப் பகுதிகள் உள்ளதாலும், ஏராளமான கிராமங்கள் உள்ளதாலும் புதை வழி, மேம்பாலம் உள்ளிட்டவை அமைக்கும் திட்டத்துக்கு கூடுதல் செலவாகுமென்பதால் திட்டம் நிறைவேற்றம் தள்ளிக்கொண்டே போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எந்தவொரு மாநிலத்திலிருந்தும் மக்கள் காரைக்கால் வரை வந்துசேர்கிறார்கள். திருநள்ளாறு கோயிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை ஆயிரக்கணகக்கில் உள்ளது. எனவே காரைக்கால் - பேரளம் 23 கிலோ மீட்டர் திட்டத்தை நிறைவேற்றம் காலதாமதாம் ஆவதால், காரைக்கால் முதல் திருநள்ளாறு வரை 5 கிலோ மீட்டர் தூரம் வரை ரயில்பாதை அமைத்து, 5, 6 ரயில்கள் நிற்கும் வகையில் நிலையம் அமைத்தால், நாட்டில் எந்தவொரு பகுதியிலிருந்தும் திருநள்ளாறுக்கு எளிதில் வந்துரே வாய்ப்பு கிடைத்துவிடும்.
ரயில்வே பட்ஜெட் 26-ம் தேதி ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்யவுள்ளார். நிதி நெருக்கடி காரணமாக அறிவிப்புகள் குறைவாகவே இருக்குமென கூறப்படுகிறது. பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் திட்டங்களுக்கான அறிவிப்புகள் இருக்குமென கூறப்படுவதால், காரைக்கால் - திருநள்ளாறு திட்டத்தை தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை செய்யவேண்டுமென்ற வலியுறுத்தல் காரைக்கால் மக்களிடையே உள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நுகர்வோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பாரீஸ்ரவி கூறியது : காரைக்கால் - திருநள்ளாறு திட்டம் நடைமுறைப்படுத்துவது சாத்தியமானதுதான். இதற்கு நிதியுதவி செய்ய பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகம் போன்ற தனியார் நிறுவனங்களின் உதவியை நாடலாம். இதுகுறித்து புதுச்சேரி அரசு, மத்திய ரயில்வே அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். புதுச்சேரி ஆளும்கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், இப்பிரச்னையை கையில் எடுத்து, ரயில்வே அமைச்சரை உடனடியாக சந்தித்து மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தொடர்பான கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.