நெல்லையில் ரயில் மறியல் முயற்சி:68 பேர் கைது
தூய்மைப் பணியாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தூய்மை இந்தியா திட்ட விளம்பரத்துக்கு பயன்படுத்தக் கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 1993-க்கு பின்னர் விஷவாயு தாக்கி
திருநெல்வேலி சந்திப்பில் ரயில் மறியலுக்கு முயன்ற 68 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தூய்மைப் பணியாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தூய்மை இந்தியா திட்ட விளம்பரத்துக்கு பயன்படுத்தக் கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 1993-க்கு பின்னர் விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மனித மலத்தை கையால் அள்ளும் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கான மாற்றுப்பணியையும், மறுவாழ்வையும் ஏற்படுத்த வேண்டும். தூய்மைப் பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். மலம் அள்ளுதல், துப்புரவு பணி செய்தல் ஆகிய பணிகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் அறிவித்திருந்தது.
அதன்படி ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாவட்டச் செயலர் கு.கி.கலைகண்ணன் தலைமையில் இளைஞரணி நிர்வாகி இளஞ்செழியன் உள்ப ஏராளமானோர் திருநெல்வேலி த.மு.சாலை வழியாக ரயில் மறியலில் ஈடுபட சந்திப்பு ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி நகரம் உதவி ஆணையர் கந்தசாமி, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதிராஜா தலைமையிலான போலீஸார் அவர்களை மறித்து கைது செய்தனர்.
இப் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 68 பேரை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.