விருதுநகர் அருகே ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
விருதுநகர் அருகே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியைகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல தொந்தரவு செய்ததாக வந்த புகாரின் பேரில் தலைமையாசிரியர் உள்பட 3 பேரை தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் அருகே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியைகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல தொந்தரவு செய்ததாக வந்த புகாரின் பேரில் தலைமையாசிரியர் உள்பட 3 பேரை தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியைகளிடம், ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் கிராம மக்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி அக்குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதோடு கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனுவையும் அளித்தனர்.
இது தொடர்பாக பெண் ஆசிரியைகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தார்களா என்பது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் விசாரணை செய்தனர். அதில் பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக அந்த ஆசிரியர்கள் மீதான அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன் அடிப்படையில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரசாமி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் உதயசூரியன், பட்டதாரி ஆசிரியர் மணிவண்ணன் ஆகியோரை தாற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.