சிங்கப்பூர், மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவைகள் ஜூலை மற்றும் ஆகஸ்டில் தொடக்கம்
திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு டைகர், மலிண்டோ விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை வழங்கவுள்ளன.
திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு டைகர், மலிண்டோ விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை வழங்கவுள்ளன.
திருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானப்போக்கு வரத்தும், மேலும் பல நாடுகளுக்கு மாற்று விமானங்கள் (டிரான்சிட்) மூலமும் விமானப்போக்கு வரத்து நடைபெற்று வருகின்றன. இதில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு மட்டும் நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அதனைக் கருத்தில் கொண்டு விமான நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு விமான போக்கு வரத்துகளையும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது சிங்கப்பூருக்கு டைகர் ஏர்வேஸ் நிறுவனமும், மலேசியாவுக்கு மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் கூடுதல் போக்கு வரத்துகளை தொடங்கவுள்ளன.
சிங்கப்பூருக்கு இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் சிங்கப்பூர் நிறுவனமான டைகர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இரவு மற்றும் பகல் வேளையில் விமானங்களை இயக்கி வருகின்றன. டைகர் ஏர்வேஸ் வார நாட்களில் தினசரி பகல் நேரத்திலும் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டும் இரவு நேரத்திலும் விமானங்களை இயக்கி வருகின்றது. தற்போது மேலும் ஒரு இரவு நேர விமானத்தை ஜூலை 2-வது வாரத்திலிருந்து இயக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் டைகர் ஏர்வேஸ் வாரம் 11 விமானங்களை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவுக்கு வார நாட்களில் பகலில் தினசரி ஒரு முறைவீதம் ஏழுநாட்களும், இரவு வேளையில் திங்கள், புதன், சனிக்கிழமை என மூன்று நாட்களுமாக வாரம் 10 சேவைகளை வழங்கி வரும் மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனம், இனி வாரம் முழுவதும் பகலில் ஏழு இரவில் ஏழு என மொத்தம் 14 சேவைகளை வழங்கவுள்ளது. இதன்மூலம் மலேசியா செல்வதற்கு தினசரி 180 இருக்கைகள் அதிகரிக்கும். இந்த விமான சேவை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என மலிண்டோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர சிங்கப்பூரைச் சேர்ந்த சில்க் ஏர்வேஸ் நிறுவனம் மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் சிலவும் திருச்சியில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.