இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரிக்கை
இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள்....
இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென புதன்கிழமை ஆதிரெங்கம் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நமது நெல்லைக்காப்போம் தேசியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு நமதுநெல்லைக்காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் உஷாகுமாரி தலைமை வகிக்க, தமிழக ஒருங்கிணைப்பாளர் நெல்.ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் ரசாயன உரம் பயன்பாட்டினால் வளம் இழந்த நிலையில் உள்ள நிலங்களில் பயிரிட பசுந்தாள் உரவிதைகளான டேஞ்சா, சஸ்பேனியா, கொளைஞ்சி, சணல் உள்ளிட்ட விதைகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
வருவாய்த்துறையினர் காவல்துரையினரின் கெடுபிடி காரணமாக நன்செய், புன்செய் நிலங்களுக்கு சம்பந்தப்பட அதே பகுதியில் இருந்து வண்டல் மண்அடிக்க அனுமதி வழங்கவேண்டும்,
கேரள மாநிலத்தில் உள்ளது போல விலை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடைச்சட்டம் இயற்றுவதுடன், வீட்டுமனைகளாக மாற்றம் செய்யப்பட்ட மனைகளை மூன்று ஆண்டுகளுக்குள் வீடு கட்டாவிட்டால் அரசே கையக்கபடுத்தி வீடு இல்லாதவர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றவேண்டும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி வகைகளை, தமிழக அரசின் சத்துணவு, அங்கன்வாடி, போன்றவைகளுக்கு பயன்படுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது .
இக்கூட்டத்தில் சீமா (கர்நாடகா) நரசிம்மரெட்டி (தெலுங்கானா) அலாவுதீன் (மேற்குவங்காளம்) சாரங்கி (ஒரிஸ்ஸா), பாதுகாப்பான உணவுக்கான பிரச்சார தேசிய ஒருஙகிணைப்பாளர் கவிதாகுருகந்தி, கிருஷ்ணமூர்த்தி (புதுச்சேரி) உள்பட பலர் கலந்துகொண்டனர்.