சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த பேருந்து: குழந்தை பலி, 11 பேர் காயம்
சிதம்பரம் அருகே ஆம்னி பேருந்து ஒன்று மாட்டு வண்டி மீது மோதி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இதில் ஒன்றரை வயது குழந்தை இறந்தது. 11 பேர் படுகாயமடைந்தனர்.
சிதம்பரம் அருகே ஆம்னி பேருந்து ஒன்று மாட்டு வண்டி மீது மோதி சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இதில் ஒன்றரை வயது குழந்தை இறந்தது. 11 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இப்பேருந்து சனிக்கிழமை அதிகாலை சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிலம்பிமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கரும்பு சோலை ஏற்றிச்சென்ற மாட்டு வண்டி மீது பேருந்து மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனைமரங்களை மோதி, அருகிலிருந்து பிரகாஷ் என்பவரது வீட்டிற்குள் புகுந்து நின்றது. இதில் வீட்டிலிருந்து பிரகாஷின் ஒன்றரை வயது குழந்தை பிரதீஷ் இடிபாடுகளில் சிக்கி இறந்தது.
மேலும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த பிரகாஷ் மனைவி சுதா (24), மகள் பிரனிதா (3), மாமனார் ராயர் (55) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மாட்டு வண்டி ஓட்டி வந்த ஐயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் (47), ராயர் (50) ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.