காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதி வாகனங்களுக்கு அங்கேயே பர்மிட் வழங்க ஏற்பாடு: போக்குவரத்து ஆணையர் தகவல்
காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதி வாகனங்களுக்கு அங்கேயே பர்மிட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து ஆணையர் எஸ்.டி.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதி வாகனங்களுக்கு அங்கேயே பர்மிட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து ஆணையர் எஸ்.டி.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாடகை டாக்சி, வேன்கள், வாடகை லாரிகள் உள்ளிட்ட சரக்கு மற்றும் சுற்றுலா போக்குவரத்து பெர்மிட் பெறுவதற்காக புதுச்சேரி போக்குவரத்துத் துறை தலைமை அலுவலகத்தை நாட வேண்டி உள்ளது. இதை மாற்றி அந்தந்த பிராந்தியங்களிலேயே சுற்றுலா மற்றும் சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்குப் பர்மிட் வழங்கும் முறை விரைவில் அமுலுக்கு வரும் என முதல்வர் 2015-16 பட்ஜெட் உரையின் போது குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சுற்றுலா மற்றும் பாரம் ஏற்றிச் செல்லும் சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கு பர்மிட் பெற விரும்பும் காரைக்கால் பகுதி மக்கள் காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு காரைக்கால் ஆட்சியர் ஒப்புதலுக்கு பின் பர்மிட் தரப்படும்.
மாஹே மற்றும் ஏனாம் பகுதி மக்கள் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் மண்டல நிர்வாகியின் ஒப்புதலுக்கு பின் பர்மிட் தரப்படும்.
இதுவரை புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பெற்ற பர்மிட்டுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்கு அனுப்புவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் தற்போது இயக்கப்படும் வாகனங்களுக்கு பர்மிட் புதுப்பித்தல் ஆவணங்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட உடன் அந்தந்த வாகனங்களுக்கான பெயர் மாற்றம், வாகன மாற்றம், பர்மிட் ஒப்படைப்பு, பர்மிட் வாகன கட்டமைப்பு, முதலான சேவைகளை அந்தந்த பகுதி போக்குவரத்து கிளை அலுவலகங்களிலேயே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்து.
இந்த ஏற்பாடுகளைத் தொடர்ந்து காரைக்கால், மாஹே மறறும் ஏனாம் பகுதி போக்குவரத்து வாகனங்களுக்கு பர்மிட் விண்ணப்பங்கள் பெறும் பணி புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் 11-ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
12-ம் தேதி முதல் காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மாஹே, ஏனாம் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
பயணிகளுக்கான பேருந்துகள், ஆம்னி பஸ்கள், ஆட்டோ விக்ரம், டாடா மேஜிக் தொடர்பான பர்மிட் வழங்கும் நடைமுறை புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவலகத்திலேயே தொடர்ந்து நடைபெறும் என்றார் சுந்தரேசன்.