விருதுநகர் அருகே பால தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து - 2 பேர் சாவு
விருதுநகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் 4 வழிச்சாலை பால தடுப்புச்சுவரில் திங்கள்கிழமை அதிகாலை மோதிய விபத்தில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், வழக்குரைஞர் உள்பட
விருதுநகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் 4வழிச்சாலை பால தடுப்புச்சுவரில் திங்கள்கிழமை அதிகாலை மோதிய விபத்தில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், வழக்குரைஞர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் பொற்செழியன்(71), இவரது மகன் இளஞ்செழியன்(52) வழக்குரைஞராகவும் இருந்து வருகிறார். இவரது உறவினரான சிவந்திப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் நடந்த உலகத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒரு காரில் புறப்பட்டுச் சென்றனர். அந்தக் காரை நரசிங்கநல்லூரைச் பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டினாராம்.
இந்நிலையில், இரவில் மாநாடு முடிந்து 4 பேரும் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, விருதுநகர் அருகே மருளூத்துக்கும்-பட்டம்புதூர் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 4 வழிச்சாலையில் உள்ள குறுகிய பாலச்சுவரில் திங்கள்கிழமை அதிகாலையில் மோதியது.இதில், காரில் பயணம் செய்த ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அதையடுத்து, அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பொற்செழியன், பெருமாள் ஆகியோர் பலனின்றி உயிரிழந்தனர்.
Advertisement
அதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த இளஞ்செழியன், ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது தொடர்பாக இளஞ்செழியன் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விபத்து சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.