பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைகளை பாதுகாத்தல் குறித்து போலீஸாருக்கு பயிற்சி
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக காவல் துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியோருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக காவல் துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியோருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் நடந்த முகாமிற்கு ஜான் தேவாரம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.அணில்குமார் முன்னிலை வகித்தார். இதில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தல் தொடர்பான சட்டங்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகளிடம் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் எப்படி நடந்து கொள்வது தொடர்பாக உதவி காவல் கண்காணிப்பாளர் மாடசாமி விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதேபோல், பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் குழந்தைகளிடம் பாரமுகம் காட்டக் கூடாது. எக்காரணம் கொண்டும் மனநோகும் படி திட்டவும் கூடாது. மேலும், மனரீதியாக உளைச்சல், பாலியல் தொல்லை கொடுப்பது குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படும்.
சிறுமி திருமணம் தொடர்பான தகவல் பெரும்பாலும் சக மாணவிகளிடம் இருந்து கிடைக்கிறது. பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தாலும், அதை மறைக்கவே விரும்புகின்றனர். நிகழாண்டில் இதுவரையில் 45 சிறுமி திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சைல்டு லைன் அமைப்பின் திட்ட இயக்குநர் டாக்டர்.ஜான்தேவாரம் விளக்கமாக எடு்த்துரைத்தார்.
இப்பயிற்சி முகாமில் காவல் துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் அமைப்பினர் செய்திருந்தனர்.