பொறியியல் மாணவர் மர்ம சாவு: உண்ணாவிரதம் இருக்க முயன்ற தாய் உள்பட 232 பேர் கைது
ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கோகுல்ராஜின் சடலத்தை வாங்க மறுத்து, சிபிசிஐடி விசாரணை தேவை என வலியுறுத்தி சேலம் அரசு மருத்துவமனை வாயிலில்
ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கோகுல்ராஜின் சடலத்தை வாங்க மறுத்து, சிபிசிஐடி விசாரணை தேவை என வலியுறுத்தி சேலம் அரசு மருத்துவமனை வாயிலில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற அவரது தாய் உள்பட 232 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சேலம் அருகேயுள்ள ஓமலூர் சாஸ்தா நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கோகுல்ராஜ் (22). பி.இ. பட்டதாரியான இவர் கடந்த 24-ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்செங்கோடு போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில், காதல் விவகாரத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாகக் கூறி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோகுல்ராஜின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சேலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சென்னை போரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணைத் தலைவரும், தடயவியல் துறைத் தலைவருமான டாக்டர் சம்பத்குமார் தலைமையில் மூவர் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். இதை விடியோவில் பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து டாக்டர்கள் கோகுல்ராஜின் உடலை சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிநேரம் பிரேதப் பரிசோதனை செய்தனர். இது விடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. இதுதவிர கோகுல்ராஜ் இறந்து கிடந்த பள்ளிபாளையம் தண்டவாளப் பகுதிக்கு மருத்துவர் சம்பத்குமார் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த விவரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
சாகும் வரை உண்ணாவிரதம்:
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் தலைமையில் கோகுல்ராஜின் தாய் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இவர்கள் கோகுல்ராஜ் சாவில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து அரசு மருத்துவமனையின் வாயிலில் அமர்ந்தனர். மேலும், அவர்கள் காவல்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகர துணை ஆணையர் எஸ்.செல்வராஜ் தலைமையிலான போலீஸார், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீஸாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார், உண்ணாவிரதம் இருக்க முயன்ற கோகுல்ராஜின் தாய் சித்ரா உள்பட 232 பேரை கைது செய்தனர்.