விருதுநகரில் அரசு மதுக்கடை பாரை சூரையாடிய இளைஞர்கள் 8 பேர் கைது
விருதுநகர் அரசு மதுக்கடை பாரில் தகராறு செய்து இருக்கைகள் மற்றும் மேஜைகளை அடித்து
விருதுநகர் அரசு மதுக்கடை பாரில் தகராறு செய்து இருக்கைகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் 8 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விருதுநகரில் காமராஜர் புறவழிச்சாலையில் அரசு மதுக்கடையுடன் இணைந்த பார் செயல்பட்டு வருகிறது. இந்தப் பாரை அல்லம்பட்டி தட்சன்யாபுரத்தைச் சேர்ந்த கண்ணனின் மகன் ரவி(36) என்பவர் நடத்தி வருகிறார். இதே பகுதியில் அல்லம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன்(22), சேர்மராஜ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 8 பேரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கடை மூடுவதற்கு முன்பாக மது குடிக்க வந்தார்களாம். அப்போது, கடையில் மதுப்புட்டிகளை வாங்கிக் கொண்டு பாருக்கு வந்துள்ளனர். அங்கு பலருக்கு இடையூராக சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்களாம். இதை பார் நடத்துகிறவர் பார்த்து கடை அடைக்கும் நேரம் என்பதால் சத்தம் போடக்கூடாது என்றும், அமைதியாக குடித்துவிட்டு செல்லும் படி கூறினாராம்.
உடனே 8 பேரும் சேர்ந்து எங்கள் பகுதியிலேயே பாரை நடத்திக் கொண்டு வெளியே போக சொல்கிறாயா எனக் கேட்டு அங்கிருந்த இருக்கைகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கியதோடு, தகாத வார்த்தைகள் பேசியதோடு ரவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ரவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அல்லம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன்(22), சேர்மராஜ்(22), ஆரோக்கியராஜ்(22), முத்துக்காமாட்சி(20), சண்முகவேல்(21), ஆனந்தகுமார்(27), அருண்குமார்(25), விஜயகணேஷ்(23) ஆகியோரை கைது செய்தனர்.
Advertisement