பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 1.40 கோடியை தாண்டியது
பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஒரு
பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஒரு கோடியே நாற்பது இலட்சத்தை தாண்டியது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 40 லட்சத்து 48 ஆயிரத்து 825 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தங்கம் 762 கிராமும், வெள்ளி 8 ஆயிரத்து 7 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 726 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.