14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ அமைப்பு சார்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி புத்தூரில் நடைபெற்ற பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு மாநகரக் கிளைத் தொடர்பாளர் செ. அமல் சேசுராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில இணைச் செயலர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலரும், ஜேக்டோ உயர்நிலைக் குழு உறுப்பினருமான சே.நீலகண்டன் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 14 வகையான நலத்திட்டங்களைச் செயல்படுத்த தனி அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 8-ம் தேதி ஜேக்டோ அமைப்பு சார்பில் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி ஆட்சியரகம் வரை நடைபெறும் பேரணியில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சிராஜுதீன், ஜேம்ஸ், ரெக்ஸ் பெர்ஜித்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழக மாவட்டச் செயலர் ஏ. லாரன்ஸ் அமலின் சவரிராஜ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.