நெல்லையில் குடும்பத் தகராறில் மனைவி வெட்டிக் கொலை: கணவர் போலீஸில் சரண்
பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறு காரணமாக புதன்கிழமை மனைவியை வெட்டிக் கொலை செய்த சுமை ஆட்டோ ஓட்டுநர் போலீஸில் சரணடைந்தார்.
பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறு காரணமாக புதன்கிழமை மனைவியை வெட்டிக் கொலை செய்த சுமை ஆட்டோ ஓட்டுநர் போலீஸில் சரணடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள மணக்கரையை சேர்ந்தவர் அன்பரசு (32). சுமை ஆட்டோ ஓட்டுநர். பாளையங்கோட்டை இந்திராநகரை சேர்ந்த இசக்கி மகள் பொன்ஈஸ்வரி (27). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற பொன்ஈஸ்வரி வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
கடந்த 15 ஆம் தேதி ஊர் திரும்பிய பொன்ஈஸ்வரி நீதிமன்ற உத்தரவின்படி தந்தை வீட்டுக்கு சென்றார். இதனால் பொன்ஈஸ்வரி மீது அன்பரசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
புதன்கிழமை இந்திராநகரில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்த அன்பரசு தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.இதில் பலத்த காயமடைந்த பொன்ஈஸ்வரி சம்பவ இடத்திலே இறந்தார். அன்பரசு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் வழக்குப் பதிந்து அன்பரசை கைது செய்தனர்.