பாபநாசம், சேர்வலாறில்மின்சாரம் உற்பத்தி பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் பாபநாசம், சேர்வலாறு நீர்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் பாபநாசம், சேர்வலாறு நீர்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை நீர் ஆதாரத்தை கொண்டு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்பட 11 அணைகள் கட்டப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர், பாசனத் தேவையை இந்த அணைகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் நீர் மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையம் மூலம் 24 மெகாவாட் மின்சாரமும், பாபநாசம் கீழ்அணையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையம் மூலம் 30 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யலாம்.
இவ்விரு மின் உற்பத்தி நிலையங்களில் ஒரே சமயத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய 800 முதல் 1,000 கனஅடி தண்ணீர் அணைகளில் இருந்து திறக்க வேண்டும். திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டால் மின்சாரம் உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ அறுவடை முடிவடைந்து வரும் நிலையில் பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை மூடப்பட்டது. இதனால் பாபநாசம், சேர்வலாறில் உள்ள நீர் மின்உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
சேர்வலாறில் மின்உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பாபநாசம் உற்பத்தி நிலையத்தில் ஒரு டர்பன் மட்டும் இயங்குவதால் 7.5 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.