ஆம்பூரில் பன்றி காய்ச்சலுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம். அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டுமென ஆம்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் நூர் ஸயீத் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது :
ஆம்பூர் நகரில் போலி டாக்டர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக எனக்கு புகார் வந்தது. மேலும் இதுகுறித்து ஆம்பூர் நகராட்சி ஆணையரிடமும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தகவல்களை கூற வேண்டியது என்னுடைய கடமை.
பன்றி காய்ச்சலுக்கான அறிகுறியுடன் பலர் அரசு மருத்துவனைக்கு வருகின்றனர். அதாவது காய்ச்சல், தொண்டைவலி, இருமல், தலைவலி, சளி, உடல் வலி ஆகிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓரிரு நாட்களிலேயே அவர்கள் குணமாகிவிடுகின்றனர். அதனால் அவர்களுக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்பது தெரியவருகிறது. ஆம்பூரில் இதுவரை எவருக்கும் பன்றி காய்ச்சல் வரவில்லை.
ஆம்பூரில் யுனானி மருத்துவர் ஒருவர் அவரே தயாரித்த மருந்தை பன்றி காய்ச்சலுக்கான மருந்தாக பல நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறாராரம். சாதாரண காய்ச்சலுக்கும் பன்றி காய்ச்சலுக்கான மருந்தை கொடுத்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. அவரே மருந்து தயாரித்திருந்தாலும், அதனை மத்திய அரசின் அனுமதி பெற்று தான் வழங்க வேண்டும். இதுகுறித்து எங்களுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே பொதுமக்கள் போலி மருத்துவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.