கோடை சாகுபடி: நெல்லை மாவட்டத்தில் 9,500 ஏக்கரில் நெல், உளுந்துப் பயிர்கள் நடவு
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை கால சாகுபடியாக 5,500 ஏக்கரில் உளுந்து பயிரும், 4,000 ஏக்கரில் நெற்பயிரும் நடவு செய்யப்பட்டுள்ளதாக.....
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை கால சாகுபடியாக 5,500 ஏக்கரில் உளுந்து பயிரும், 4,000 ஏக்கரில் நெற்பயிரும் நடவு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாமிரவருணி பாசனத்தில் கடந்த 2014 இல் வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 அணைகளும் நிரம்பின. இதை தொடர்ந்து இப்பாசனத்தில் பிசான பருவத்தில் முழு அளவில் நெல், வாழை போன்றவை சாகுபடி செய்யப்பட்டது.
பிசான சாகுபடி அறுவடை முடிந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு கணிசமாக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றும் முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் மூலம் பாபநாசம் அணையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 8,124 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மதகு பாசனம் பெறும் 2,756.62 ஏக்கர் நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணிமுத்தாறு பிரதான கால்வாய் பாசனத்தில் உள்ள குளங்களில் உள்ள நீர் இருப்பை கொண்டு முதல் மற்றும் 2 ஆவது மதகு பாசனத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.
பிசான சாகுபடிக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது பாசனக் குளங்களில் இருப்பு உள்ள நீரை கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை கால சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. பிசான பருவம் அறுவடை செய்த நிலங்களில் விவசாயிகள் 5,500 ஏக்கரில் உளுந்து பயிரும், 4,000 ஏக்கரில் நெற்பயிரும் சாகுபடி செய்துள்ளனர்.
ஜூன் மாதம் கார் சாகுபடி பணிகளை தொடங்குவதற்கு முன்பாக உளுந்து பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். இது தவிர பருத்தி, சோளம், சிறு தான்ய வகைகளும் பயிரிடப்பட்டுள்ளது என வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.