முகப்பு
தமிழ்நாடு

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! காவல்துறையைச் சீரழித்த திமுக அரசு: இபிஎஸ்

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனப் போக்குக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Updated On : 13 மார்ச், 2026 at 12:31 PM
முதல்வர் ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி
பகிர்:

விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனப் போக்கை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "விளாத்திகுளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை அதிமுக ஒலித்து வருகிறது.

களத்தில் உறவினர்கள், ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி.யை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி.

இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம்?

காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவுக்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் மார்ச் 17-ல் தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் அதிமுக களம் காண உள்ளது.

விரைவில் அமையப்போகும் அதிமுக அரசு, எப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாய்போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண்போல் காக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Edappadi Palaniswami condemns the police's lax attitude regarding the sexual assault and murder of a young girl

முழு கட்டுரையைப் படிக்க →