குன்னம் தொகுதியில் டெபாசிட் இழப்பார் அமைச்சர் சிவசங்கர் : எடப்பாடி பழனிசாமி
ரூ. 5 லட்சம் கோடி கடன் மூலம் மக்களின் மீது லட்சக் கணக்கான கடனை திமுக அரசு ஏற்றிவைத்துள்ளதாக இபிஎஸ் விமர்சனம்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் அமைச்சர் சிவசங்கர் டெபாசிட் இழப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 6) தெரிவித்தார்.
ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியதன் மூலம் மக்கள் ஒவ்வொருத்தரின் மீதும் லட்சக் கணக்கான கடனை திமுக அரசு ஏற்றிவைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
பெரம்பலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 6) பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. எதைப்பற்றியும் திமுகவுக்கு கவலையில்லை.
உணவுப்பொருள்கள் விலை உயரும்போது அதனைக் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. விலை குறைவாக உள்ள மாநிலத்தில் விளைப்பொருள்களைப் பெற்று தமிழ்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தினோம்.
விவசாயிகளின் துன்பம் அறிந்தவன் நான். ஏழைகளின் துயரம் அறிந்தவன் நான். அதனால், அவர்களுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை சிந்தித்துச் செயல்படுத்த முடிகிறது.
தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. போதைப்பொருள் பயன்பாட்டால் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. போதைப் பொருள்களை ஒழிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் கஞ்சா விற்பனை முழுவதுமாக தமிழ்நாட்டில் ஒழிக்கப்படும்.
இந்தியாவுக்கே முதன்மை மாநிலம் தமிழ்நாடு என மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், எதில் முதல் மாநிலம் என்பதைக் கூறுகிறேன். அதிகம் கடன் வாங்கியதில் தமிழகம் முதலிடம். திமுக ஆட்சியில் ரூ. 5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொருத்தர் மீதும் லட்சக்கணக்கில் கடன் உள்ளது.
தமிழகம் திவாலாகும் நிலைக்கு கொண்டுவந்த ஆட்சி மீண்டும் வேண்டுமா? மக்களின் வரிப்பணம் எங்கோ போனது? அரியலூர் மாவட்டத்துக்கு என்ன திட்டத்தை திமுக கொண்டுவந்தது.
கிடைக்கக் கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துள்ளது. அரிசி விலை கிலோவுக்கு ரூ. 30 உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்ததை விட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.
ரேஷன் கடை அரிசியை சமைக்க முடியவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தன. அதிமுக ஆட்சி அமைத்ததும் தரமான அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படும். அதற்கான செலவை அரசு ஏற்கும்.
ரேஷன் கடைகளில் விலையில்லா பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக் திறந்தோம். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை பொருத்துக்கொள்ள முடியாததால், திமுக அத்திட்டத்தை ரத்து செய்தது. அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக் கொண்டுவரப்படும்.
அதிமுக ஆட்சியில் 7.5 உள் ஒதுக்கீடு பெறப்பட்டது. இதனால், ஆண்டுக்கு 3 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை அதிமுக ஆட்சி கொடுத்தது.
இந்தியாவிலேயே வறட்சி நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசுதான். வெள்ளம், கரோனா பொதுமுடக்கம் என எந்தவித வருவாயும் அரசுக்கு இல்லை. இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் வறட்சியா? வெள்ளமா? பெருந்தொற்று முடக்கமா? எப்படி கடன் வந்தது. தமிழகத்தின் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். குன்னம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான சிவசங்கர் டெபாசிட் இழப்பார். மக்கள் அதனைச் செய்வார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.