ரயில்முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
திருச்சி கம்பரசம்பேட்டை அருகேயுள்ள முத்தரசநல்லூர் மற்றும் பழூர் இடையிலான பகுதியில் ரயிலில் அடிபட்டு இருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
திருச்சியில் காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.
திருச்சி கம்பரசம்பேட்டை அருகேயுள்ள முத்தரசநல்லூர் மற்றும் பழூர் இடையிலான பகுதியில் ரயிலில் அடிபட்டு இருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர் தனவேல், ஆய்வாளர் கோவிந்தராஜன், உதவி ஆய்வாளர் கார்த்திகா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இறந்தவர்களிடமிருந்த செல்போன்கள் மற்றும் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை வைத்து மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தது காதல்ஜோடி என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் துஷாந்த் (20). டிப்ளமோ படித்து விட்டு துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தில்லைநகர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஹரிணி (17). 12-ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.
இருவரும் உறவினர்கள், எனவே காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெற்றோருக்கு இந்த விவரம் சரிவர தெரியவில்லை. இளம்பெண்ணின் உறவினர்கள் சிலருக்கு இந்த விவரம் தெரியவந்தபோது, தாயார் கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார். எனவே முதலில் படிப்பு முடியட்டும் பின்னர் திருமணம் குறித்து பேசிக்கொள்ளலாம் என கூறிவந்துள்ளனர்.
ஆனால் அதில் உடன்படாமல் திங்கள் கிழமை மாலை காதல்ஜோடி இருவரும் வீட்டை விட்டு கிளம்பியுள்ளனர். அங்குமிங்கும் சுற்றித்திரிந்தபின் வீடுதிரும்ப முடிவுசெய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நேற்றுதான் விஷயம் இரு தரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. எனவே பெற்றோர் தங்களது திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் என்ன செய்வது என நினைத்த காதல்ஜோடி சாவிலாவது இணைவோம் என தற்கொலை செய்துள்ளனர் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இரவில் முத்தரசநல்லூர் பகுதிக்கு வந்த காதல் ஜோடி இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதில் தங்களது செல்போன் இரண்டையும் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். ரயில் மோதிய வேகத்தில் உடல்கள் தூக்கியெறியப்பட்டு கிடந்தன