மனைப்பட்டா வழங்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
மனைப்பட்டா வழங்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ. ஆ.பாஸ்கர் தலைமையில் வெள்ளிக்கிழமை புதுச்சேரி மரப்பாலம் அருகே சாலை மறியல் நடைபெற்றது. இதனால் கடலூர்-புதுச்சேரி சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மனைப்பட்டா வழங்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ. ஆ.பாஸ்கர் தலைமையில் வெள்ளிக்கிழமை புதுச்சேரி மரப்பாலம் அருகே சாலை மறியல் நடைபெற்றது. இதனால் கடலூர்-புதுச்சேரி சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி 100 அடி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக அனிதா நகர் பகுதியில் 30-க்கு மேற்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
மேலும் அவர்களுக்கு வாரியார் நகரில் மாற்றிடம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடங்களுக்கு பட்டா தரப்படவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை வருவாய்த்துறையிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை.
சாலை மறியல்
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அனிதா நகர் பகுதி மக்கள் 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் அருகே 20 நிமிடங்கள் மறியல் செய்தனர். இந்நிலையில் போலீஸôர் வாகனங்களை திருப்பிவிட்டதை அறிந்த பொதுமக்கள், அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மரப்பாலம் சந்திப்பில் மறியல் செய்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக முதலியார்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்,ஏ. பாஸ்கரும் சாலை மறியலில் கலந்து கொண்டார். புதுவையில் இருந்து கடலூர், மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் ஆயிரக்கணக்கானவை செல்லும் வழி என்பதால் மறியலால் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. ஒரு மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.