விருதுநகரில் குழந்தைகள் காப்பகத்தில் சேர மாணவிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் சூலக்கரையில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேருவதற்கு தகுதியான மாணவ, மாணவிகள் ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் சூலக்கரையில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேருவதற்கு தகுதியான மாணவ, மாணவிகள் ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் சூலக்கரையில் சமூக நலத்துறையின் சார்பில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில் 1-ம் முதல், 12-ம் வகுப்பு வரை மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பட்டம், பட்டயப்படிப்பு பயிலும் மாணவிகள் வரையில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.
இங்கு அனுமதிக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, உறைவிடம், மருத்துவம், சீருடை, பாடக்குறிப்பேடுகள் மற்றும் காலணிகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். அதேபோல், பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொழிற்கல்விக்கு ரூ.50 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கு ரூ.30 ஆயிரமும் அரசின் கல்வி உதவித் தொகையாக அளிக்கப்படும்.
தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள், மனநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், ஆயுள் கைதிகளின் குழந்தைகள், இவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
மாணவர்கள் 5 வயது பூர்த்தி அடைந்து 10 வயது முடியவும், மாணவிகள் 5 வயது முடிந்து 18 வயது முடியவும் அனுமதிக்கப்படுவர். அதேபோல், பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளை மட்டும் 21 வயது வரை காப்பகத்தில் அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பபடிவத்தினை குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள அலுவலகங்களில் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். மேலும்,விண்ணப்பத்துடன் ஆதரவற்றோருக்கான சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலர் வருவாய் சான்று, ஜாதி சான்று, கல்விச் சான்று ஆகியவைகளை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் வளாகம் மற்றும் கண்காணிப்பாளர், ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம், சூலக்கரை, தாதம்பட்டி சாலை, விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், இது தொடர்பாக 04562-252701, 04562-252189 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.