குளித்தலை அருகே ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி, 4 பேர் படுகாயம்
குளித்தலை அருகே புதன்கிழமை காலை ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை அருகே புதன்கிழமை காலை ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் தந்தை மகன் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (39). இவர் தனது தந்தை லெட்சுமணராவ் (60) என்பவருடன், தனது தாய்க்கு திதிகொடுக்க முத்தரசநல்லூரிலிருந்து கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே சிந்தலவாடியில் உள்ள கோயிலுக்கு ஆட்டோவில் வந்துகொண்டிருந்தார். ஆட்டோவை முத்தரநல்லூர் தேவாங்கிநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (50) என்பவர் ஓட்டி வந்தார்.
ஆட்டோ திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலம் பிரிவு சாலை அருகே வந்தபோது, திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் ஆனந்த், லெட்சுமணராவ், ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காரில் வந்த திருப்பூரைச் சேர்ந்த சுப்ரமணி (53), கார் டிரைவர் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் பகுதியைச்சேர்ந்த இளமாறன் (25) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
இவர்களை அருகில் இருந்தவர் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக 5 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆட்டோ டிரைவர் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.