நெல்லை மாவட்டத்தில் 577.67 மி.மீ மழை பதிவு: 1875 குளங்கள் நிரம்பின
வடகிழக்கு பருவ மழை தொடங்கி 2 வாரங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் 577.67 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் தாமிரவருணி பாசனத்தில் 1875 குளங்கள் நிரம்பின.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி 2 வாரங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் 577.67 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் தாமிரவருணி பாசனத்தில் 1875 குளங்கள் நிரம்பின.
தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்குப் பருவத்தில் கிடைக்கும் வளமையான மழை அளவு 374.2 மி.மீ ஆகும். ஆனால் கடந்த 2014 இல் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்தது. அதாவது 714.2 மி.மீ மழை பதிவானது. நிகழ் பருவத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இது குறித்து திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் இல. பெருமாள் கூறியதாவது:
நிகழாண்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி 2 வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 577.67 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் 921 நீர்வரத்து குளங்களும், 1528 மானாவாரி்க் குளங்களும் மொத்தம் 2499 குளங்கள் உள்ளன. தொடர் மழைக்கு 75 சதவீதம், அதாவது 1874 குளங்கள் நிரம்பியுள்ளன. வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் 6 ஆண்டுகளுக்கு பிறகு மானாவாரிக் குளங்கள் நிரம்பி, அப்பகுதியில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 54,100 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதுவரை 9000 ஹெக்டேரில் நெல் நடவு பணி முடிவடைந்துள்ளது என்றார் அவர்.
சாகுபடி பணிகள் பாதிப்பு: தொடர்ந்து பெய்து வரும் மழையால் இம்மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்காக தயார் செய்யப்பட்ட நாற்றங்கால் பல இடங்களில் சேதமடைந்தன. நடவு செய்த ஓரிரு நாளில் பெய்த மழையால் நெற்பயிரும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.