சமுக நலத்துறையில் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
சமூக நலத்துறையில் பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்தார்.
சமூக நலத்துறையில் பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறையும்-தொண்டு நிறுவனங்களும் இணைந்து இளம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சுழி ஸ்பீச் தொண்டு நிறுவனத்தின் நிதி மேலாளர் செல்வம் வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் டெஸ்ட் மையத்தின் திட்ட இயக்குநர் ஜோசப்ராஜ் இளம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வளரினம் பெண்களின் நிலை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஐ.பாண்டியம்மாள் பங்கேற்று பேசுகையில், குழந்தைகள் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டும், வளர் இளம் பெண்கள் குறித்து அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்தல், அதோடு மாதந்தோறும் நடைமுறை திறன் வளர்ப்பு கல்வி, வாழ்க்கை கல்வி ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் பருவம் அடைந்ததும் திருமணம் செய்து கொடுத்தால் நல்லது என்கிற மனநிலையில் பெற்றோர்கள் உள்ளனர். எனவே அந்நிலையை அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் 93 சிறுமி திருமணங்களும், இதுவரையில் நிகழாண்டில் 70ம் நடந்துள்ளது. இதுபோன்றவைகளை தடுக்க சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
Advertisement
மாவட்ட நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் கூறுகையில், மாநில குழந்தைகளின் ஆணையம் சார்பில் 32 மாவட்டங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிற்கான 20 சட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றனர். வளர் இளம் பெண்களின் நிலை, குடும்ப வறுமை, சுமங்கலித் திட்டம், குத்தகை தொழிலளர், பாலியல் பலாத்காரம் போன்ற குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிரான காரணிகளால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பாதுகாப்பை உறுதி செய்யவும், சுயமரியாதையை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கும் வகையில் வளர் இளம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கும் வகையில் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.