முகப்பு
தற்போதைய செய்திகள்

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின்சாரம், எத்தனால் உற்பத்தி: முதல்வர் நாராயணசாமி தகவல்

திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின்சாரம், எத்தனால் உற்பத்தி மேற்கொள்ள அரசு

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

புதுச்சேரி: திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின்சாரம், எத்தனால் உற்பத்தி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 6000 ஏக்கரில் கரும்பு பயிரிடும் 18000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். புதுவை மற்றும் அருகே உள்ள தமிழக பகுதி கரும்பு விவசாயிகளும் அரவைக்காக தங்கள் கரும்பை இங்கு கொண்டு வருவர்.
ஆனால் இந்த ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதால், விவசாயிகளுக்கு ரூ.15 கோடிக்கு மேல் கரும்பு நிலுவைத் தொகை இருந்து வருகிறது. இந்நிலையில் நிகழாண்டு கரும்பு அரவையை உடனே தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், கரும்பு அரவையை நிகழாண்டு 2016-17 தொடங்கும் வகையில் கொதிகலன் சூடேற்றும் விழா இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
லிங்காரெட்டிப்பாளையம் ஆலையை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 5 லட்சம் அரவைத்திறன் கொண்ட இந்த ஆலையில் தற்போது 1 லட்சம் டன் மட்டுமே கரும்பு அரவை செய்யப்படுகிறது. இதனால் ஆலை நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
ஆலையை முழு திறனுடன் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின்சாரம், எத்தனால் உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதிக கரும்புச் சத்து கொண்ட CO-86032  என்ற வகை கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10000 விதைக்கரணை மானியமாக தரப்படுகிறது.
விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகை, ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை விரைவில் தரப்படும் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.