ஷாங்காய்,
அன்னியச் செலாவணியை அதிக அளவில் ஈர்க்க சில துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த சீன அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சீனாவின் பொருளாதார திட்டக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்னிய முதலீட்டைப் பெருமளவில் கவர மோட்டார் மின்னணு உற்பத்தி, ரயில் போக்குவரத்து உபகரணங்கள், சுரங்கம், வேளாண்மை, ரசாயன உற்பத்தி, பொழுதுபோக்குப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் குறிப்பிட்ட சில சேவை துறைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிட்டிக் வங்கியின் சர்வதேச தலைவரும், பொருளாதார வல்லுநருமான லியோ குன் தெரிவித்துள்ளதாவது:
சீனாவிலிருந்து அதிக அளவில் முதலீடுகள் வெளியேறி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் நவம்பரில் சீனாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 6,900 கோடி டாலர் (சுமார் ரூ.4.55 லட்சம் கோடி ரூபாய்) வெளியேறி உள்ளது.
யுவான் மதிப்பை நிலைநிறுத்த அதிக அளவிலான அன்னியச் செலாவணியை சீன அரசு விற்பனை செய்ததே இதற்கு முக்கிய காரணம்.
நடப்பு ஆண்டில் அன்னியச் செலவாணி கையிருப்பு வேகமாக கரைந்து வருகிறது. இதனை ஈடு செய்ய அதிக அளவிலான மூதலீடுகள் தேவைப்படுகின்றன. அதன் காரணமாகவே தற்போது அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டை ஈர்க்க எந்த வகையில் முயற்சி செய்தாலும் அது உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார் அவர்.