நெல்லை அருகே வாலிபர் கொலையில் இருவருக்கு ஆயுள் தண்டனை!
திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு புதன்கிழமை ஆயுள்தண்டனையும், தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு புதன்கிழமை ஆயுள்தண்டனையும், தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள குருந்தாவனம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (49). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தாராம்.
ஆலங்குளம் அருகே ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த கரையாடி மாடசாமி என்பவரின் சகோதரர் முருகன், பெரியசாமியிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாராம். இந்த நிலையில் முருகன் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
முருகன் சாவுக்கு பெரியசாமிதான் காரணம் எனக் கருதி கரையடி மாடசாமி தரப்பினர் 17.12.2007 அன்று பாவூர்சத்திரம்-சுரண்டை பிரதானச் சாலையில் திருச்சிற்றம்பலம் என்ற இடத்தில் வைத்து பெரியசாமியை கொலை செய்தனராம்.
இவ்வழக்கில் சுரண்டை அருகேயுள்ள இடையர்தவணை பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் ரமேஷ் (36), சமுத்திரக்கனி மகன் மயில்ராஜ் (38), ஆனந்தராஜ், மற்றொரு மாடசாமி, சாமி என்ற ஆறுமுகச்சாமி, கரையடிமாடசாமி, திருமலைவேலு ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, இவ்வழக்கு தொடர்புடைய கரையடிமாடசாமி, திருமலைவேலு ஆகியோர் மதுரையில் நீதிமன்றத்துக்கு சென்றபோது, பெரியசாமி தரப்பினர் கொலை செய்தனராம். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் வைத்து சாமி என்ற ஆறுமுகச்சாமி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரியசாமி கொலை வழக்கினை விசாரித்த திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துகிருஷ்ணன், புதன்கிழமை குற்றவாளி ரமேஷ், மயில்ராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய ஆனந்தராஜ், மற்றொரு மாடசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.