திருச்சி கே.கே.நகரில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் திறந்து வைத்தார்
திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை அமைச்சர் டி.பி. பூனாட்சி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை அமைச்சர் டி.பி. பூனாட்சி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கே.கே.நகர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையம் ஒன்று ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.மனோகரன் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி பொது நிதி என மொத்தம் ரூ.73.60 லட்சம் செலவில் திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டம் 38-வது வார்டு கே.கே.நகரில் 6,150 சதுரடி பரப்பளவில் புதிதாக சிறிய பேருந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.
அதன் கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி, புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அரசு தலைமைக் கொறடா ஆர்.மனோகரன், திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அ.ஜெயா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.பரஞ்ஜோதி, சீ.வளர்மதி, மாநகராட்சி ஆணையர் எம்.விஜயலெட்சுமி, துணைமேயர் ஜெ.சீனிவாசன், கோட்டத்தலைவர்கள் மனோகரன்,கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.பி.முத்துக்கருப்பன், மாநில கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பத்மநாபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ரத்தினவேல் நகரப் பொறியாளர் நாகேஷ், செயற்பொறியாளர் பாலகுருநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.