மீனவர் விவகாரம்: மத்திய அரசு இனியாவது அக்கறை செலுத்த வேண்டும் - கருணாநிதி வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு இனியாவது அக்கறை செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு இனியாவது அக்கறை செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இலங்கையில் எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு மட்டும் முடிவு காலமே ஏற்படுவதே இல்லை.
45 நாள்கள் மீன் பிடித் தடைக் காலம் முடிந்து, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (மே 31) கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்களை இரக்கமின்றிப் பிடித்துச் சென்றிருப்பது, இந்திய மீனவர்கள் மத்தியில் கடும் வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இராமேஸ்வரம் மீனவர் சங்கம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மீனவர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதுவதுடன் தன் முடிந்துவிட்டது எனக் கருதுகிறார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பதவியேற்றதும் உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும், மற்ற மத்திய அமைச்சர்களையும் நேரில் பார்ப்பதும், அவர்களிடம் மாநிலப் பிரச்னைகளையும் விவாதிப்பதும் வாடிக்கை.
முதல்வர் ஜெயலலிதாவும் அப்படிச் சென்று, மீனவர்களுக்கு முடிவின்றி தொடரும் துயரத்தை எடுத்துக் கூறித் தீர்வு காண முயலலாம்.
ஏற்கனவே, இந்திய மீனவர்களின் பிரச்னை தொடர்பாக இரண்டு நாடு களுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு காணப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு இனியாவது அக்கறை செலுத்துமா அல்லது எப்போதும் நடைபெறும் ஒரு தொடர் சம்பவம் தானே என்று அலட்சிய எண்ணத்தோடு விட்டு விடுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.