முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் புற்றுநோயின் தாக்கம் 15 சதவீதம் அதிகம்

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் புற்றுநோயின் தாக்கம் கடந்த 5 ஆண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் புற்றுநோயின் தாக்கம் கடந்த 5 ஆண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

 ஆன்கோ கிளப், ஜிவிஎன் மருத்துவமனை, சிசிசிஎன் அமைப்பு, திருச்சி மார்பக புற்றுநோய் சொசைட்டி இணைந்து நடத்திய புற்றுநோயை வென்றவர்களுக்கான மறுவாழ்வு தினம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு முன் ஆன்கோ கிளப்பின் செயலரும், புற்றுநோய் மருந்தியல் நிபுணருமான டாக்டர் அருண் சேஷாசலம், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜி.செந்தில்குமார், வி.எல். பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

 திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 3,500 பேர் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5 சதவீதம் அதாவது சுமார் 600-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர். திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் புற்றுநோயின் தாக்கம் 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

 ஆண்களுக்கு புகையிலை, ஆல்கஹால் அதிகம் பயன்படுத்துவதின் காரணமாக வாய், தொண்டை, உணவுக்குழல், நுரையீரல் புற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். நகரப் பகுதி பெண்கள் மார்பக புற்றுநோய்க்கும், கிராமப்புற பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கும் ஆளாகின்றனர். மரபணு மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய், மூளை புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.

 புற்றுநோயை வெல்ல ரேடியோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. இதற்கு விழிப்புணர்வு அவசியம். ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சைக்கு வந்து, தொடர் சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயை முழுமையாக வெல்லலாம். மேலும், புகையிலை, ஆல்கஹால் பொருள்களை எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தல், பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ணுதல் போன்றவற்றின் மூலமும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

 உலகில் புற்றுநோயிலிருந்து 3.1 கோடி பேர் மீண்டு வந்துள்ளனர். இந்தியாவில் 25 லட்சம் பேர் உள்ளனர். புற்றுநோயின் தாக்கத்திலிருந்து 60 சதவீதம் பேர் மீண்டு வந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் ஜூன் முதல் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோயை வென்றவர்களுக்கான மறுவாழ்வு தினம் கொண்டாடப்படுகிறது என்றனர் அவர்கள்.

 இதைத் தொடர்ந்து விழாவில் புற்றுநோய்களிலிருந்து மீண்ட நோயாளிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்ததுடன், மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே சிறந்தது என அறிவுறுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →