புதுச்சேரியில் ஹோலி கொண்டாட்டம்
புதுச்சேரியில் ஹோலி பண்டிகை வியாழக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் ஹோலி பண்டிகை வியாழக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடமாநில மக்களின் வசந்த விழாவாகக் கருதப்படும் இந்த ஹோலிப் பண்டிகை, நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல புதுச்சேரியிலும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அப்போது ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், பூசியும் நடனமாடினர். மேலும் அவர்களுடன் சேர்ந்து தமிழர்களும் நடனமாடினர்.
இது மட்டுமல்லாமல் புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஐஜி பிரவீர் ரஞ்சன், டிஐஜி கண்ணன் ஜெகதீசன், முதுநிலை எஸ்பி சந்திரன், எஸ்பி.க்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, புதுவை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படிக்கும் வடமாநில மாணவர்கள் வண்ணப் பொடிகளை சக மாணவர்கள் மீது தூவியும், நடனமாடியும் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர். மேலும் மாணவர்களுக்குள் உறியடி, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.