பண்ருட்டி பகுதி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பப்படவில்லை: வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இதுவரை பணம் நிரப்பப்படாததால் வாடிக்கையாளர் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன்
பண்ருட்டி: பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இதுவரை பணம் நிரப்பப்படாததால் வாடிக்கையாளர் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை வைக்க வசதியாக கடந்த இரண்டு நாள்களாக ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டன. அதாவது, புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காக செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஏடிஎம் இயந்திரங்களில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளை நிரப்பும் பணி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதையடுத்து அனைத்து ஏ.டி.எம். சேவை மையங்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதலே ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் நிரப்பப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், வணிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.