சென்னை: மூன்று தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. வைப்புத் தொகையை இழந்த போதிலும், குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம் 3 ஆயிரத்து 806 வாக்குகளும் (2.04 சதவீதம்), அரவக்குறிச்சியில் போட்டியிட்ட பிரபு 3 ஆயிர்தது 162 வாக்குகளும் (1.92 சதவீதம்), திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.சீனிவாசன் 6 ஆயிரத்து 930 வாக்குகளும் (3.41 சதவீதம்) பெற்றனர்.
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக, மூன்று தொகுதி தேர்தலில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் கூட அந்தக் கட்சிக்கு நான்காவது இடமே கிடைத்துள்ளது.
அந்தத் தொகுதியில் போட்டியிட்ட தண்டபாணி 4 ஆயிரத்து 105 வாக்குகள் பெற்றுள்ளார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வெறும் ஆயிரத்து 500 வாக்குகள் மட்டுமே தேமுதிகவுக்கு கிடைத்துள்ளது.
முந்திய நோட்டா: மூன்று தொகுதிகளிலும் நோட்டா வாய்ப்புக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். தஞ்சையில் 2 ஆயிரத்து 295 பேரும், திருப்பரங்குன்றத்தில் 2 ஆயிரத்து 214 பேரும், அரவக்குறிச்சியில் ஆயிரத்து 538 வாக்காளர்களும் நோட்டாவுக்கு தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வேட்பாளர்கள் ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே பெற்றனர். தஞ்சாவூர் தொகுதியில் பாமக ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. நான்காவது இடத்தில் நாம் தமிழர் வேட்பாளர் நல்லதுரை ஆயிரத்து 192 வாக்குகளைப் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.