முகப்பு
தற்போதைய செய்திகள்

லோக்பால் அமைப்பை உடனே உருவாக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஊழலற்ற நிர்வாகத்துக்கு மத்திய அரசு லோக்பால் அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 29 ஏப்ரல், 2017 at 6:21 PM
பகிர்:

ஊழலற்ற நிர்வாகத்துக்கு மத்திய அரசு லோக்பால் அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு லோக்பால் அமைப்பை கால தாமதம் செய்யாமல் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பதால் லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மக்களவையில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியின் தலைவரை நியமிக்கலாம் அல்லது சட்டத்திருத்தம் கொண்டு வரலாம். ஆனால் சட்டம் இயற்றப்பட்டு மூன்றாண்டுகள் ஆன பிறகும் கூட லோக்பால் அமைப்பை உருவாக்காமல் காரணம் கூறுவது ஏற்புடையதல்ல. 

 ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நலன் கருதி லோக்பால் அமைப்பை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் மாநிலத்தில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நடைபெற லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்க வேண்டும். 

பொது மக்கள் நலன் காக்கவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும்  லோக்பால், லோக் ஆயுக்த ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசர, அவசியம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.