ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் வாகனம் நேற்று சென்று கொண்டிருந்த போது அனந்த்நாக் மாவட்டம் குவாசிகந்த் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதால் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்தச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஒருவனை உயிருடன் பிடித்தனர். சண்டையில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மூவரும் கடந்த ஜூலை மாதம் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய அபு மவியா, ஃபர்கான், யவார் என கண்டறியப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை டிஜிபி வைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத் கூறியுள்ளார்.
அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.