தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
அரசியலமைப்பு சட்டப்படி மாநிலத்தின் நிர்வாக தலைவராக ஆளுநர் உள்ளார். பொதுமக்கள் நலன் கருதியும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் வகையில் ஊக்குவிக்கவும் ஆளுநர் செயலாற்றி வருகிறார்.
அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு பரப்புவது சட்டத்திற்கு புறம்பானது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிப்பதாகும்.
ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. மாநில நிர்வாகத்துடன் தொடர்புடைய தகவலை பெறவும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.