முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கொலை வழக்கு : காரைக்கால் நீதிமன்றத்தில் 4 பேர் ஆஜர்

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:44 AM
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் 4 பேர் காரைக்கால் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவக்குமாருக்கு, அச்சுறுத்தல் இருந்த நிலையில் இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் கட்டப்பட்டுவரும் திருமண மண்டபத்தை பார்வையிடும் வகையில் வந்த அவரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியூர்களில் விசாரணை செய்யும் வகையில் 3 தனிப்படைகளும், உள்ளூர் விசாரணைக்கு என 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கொலை வழக்குத் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரணடையச் சென்ற விருதுநநகர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன், தமிழரசன் ஆகியோரை, நீதிபதி ஏற்க மறுத்ததால் அவர்கள் தலைமறைவானார்கள்.

இந்த நிலையில், வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்குத் தொடர்பாக திருச்சியை சேர்ந்த பெருமாள் மகன் பிரபு (24), வின்சென்ட் ஆண்ட்ரோஸ் மகன் சூரியபிரகாஷ் (21), சேகர் மகன் கார்த்திக் (24), மாவீரன் மகன் சண்முகம் (21)  ஆகியோர் புதன்கிழமை புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடையச் சென்றனர்.

இந்த  வழக்கில் புதுச்சேரி வழக்குரைஞர்கள் ஆஜராகக்கூடாது என சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால், குற்றவாளிகள் சரணடைவதை ஏற்கக்கூடாது என வழக்குரைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பின்னர் சரணடைந்த நால்வரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்திருந்து, வியாழக்கிழமை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் முகாமிட்டிருந்த காரைக்கால் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர், 4 பேரையும் வியாழக்கிழமை காரைக்கால் அழைத்துவந்தனர். ஆயுதம் ஏந்திய போலீஸôர் பாதுகாப்புடன் 4 பேரும் காரைக்கால் 2-ஆவது குற்றவியல் நடுவர் பிரபு முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, நால்வரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். காரைக்கால் கிளைச் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்திடம் போலீஸôர் மனு செய்துள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →