ஜல்லிக்கட்டு பிரச்னையில் தமிழர்களின் உணர்வுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும் என முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவர் புதன்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு புதுச்சேரி அரசு ஆதரவு தருகிறது. குறிப்பாக தமிழர்களின் உணர்வுகளுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பு தர வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டத்தை கொண்டு வரும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெüனம் காப்பது வேதனை தருகிறது. விரைவில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அவருக்கு கடிதம் எழுத உள்ளேன்.
புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பாதிப்பு இல்லாத வகையில் போராட்டங்களை அமைதியான வழியில் மேற்கொள்ளலாம் என்றார்
நாராயணசாமி.
அமைச்சரவைக் கூட்டம்
பின்னர் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், மல்லாடி, ஷாஜஹான், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
வரும் 24-ம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்துவது தொடர்பாகவும், ஜல்லிக்கட்டு தொடர்பாகவும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.