திருப்பூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் இன்று கைவிடப்பட்டது
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிரந்தரமாக நீக்கக் கோரி, திருப்பூரில் பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடைபெற்று வந்த போராட்டம் இன்று கைவிடப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிரந்தரமாக நீக்கக் கோரி, திருப்பூரில் பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடைபெற்று வந்த போராட்டம் இன்று கைவிடப்பட்டது.
திருப்பூரில் காமராஜர் சாலை, மாவட்ட ஆட்சியரகம் ஆகிய பகுதிகளில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாக தொடர்ந்தது. இதில், இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
காமராஜர் சாலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் வருகை அதிகரித்த காரணத்தால், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாகப் பிரித்து அமர வைக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் 6 பேர் மொட்டையடித்துக் கொண்டனர். இதில், 5 வயதுடைய பிரனிஷ், பனிமலர் ஆகியோரும் அடங்குவர். மேலும், உயிரிழந்த விவசாயிகளின் நினைவாக பாடை கட்டி ஒப்பாரி வைக்கப்பட்டது. தொடர்ந்து, வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை வைத்து அவற்றுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், "ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்' என்றனர்.
மாநகரில் 24 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றன. புறநகர்ப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காத்திருப்பு, உண்ணாவிரதம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டம் வேண்டும் என வலியுறுத்தி 6 ஆவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ள அரசு அதுதொடர்பாக சில வாக்குறுதிகளை அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டகாரர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். இவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து கடந்து 6 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.