ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் உடனடியாக கலைந்து வெளியேறுமாறு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் கடந்த 17.01.2017 முதல் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இந்த போராட்டமானது மிகவும் கட்டுப்பாடுடனும், அமைதியாகவும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்று வந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் சென்னை பெருநகர காவல்துறையினருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கி வந்துள்ளீர்கள். தமிழக அரசின் சீரிய முயற்சியால் மக்கள் அனைவரும் விரும்பியபடி ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று (22-1-2017) நடைபெற்றுள்ளது. போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் மெரீனா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும் படி சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக் கொள்கிறது.
மேலும் எவ்வாறு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினீர்களோ அதே முறையில் காவல்துறையினருடன் ஒத்துழைத்து உடனடியாக கலைந்து செல்லும்படி உங்களை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.