புதுதில்லி: மாட்டிறைச்சி பெயரிலான தாக்குதல்களுக்கு மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான அனைத்துக்கட்சி கூட்டம் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் மற்றும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கும்படி மாநில அரசுக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். பசுவின் பெயரில் இதுபோன்று நடைபெறும் வன்முறைகளுக்கு அரசியல் அல்லது மத சாயம் பூசக்கூடாது.
இதனால் தேசம் பலன் பெறாது. பசு தாயை போன்றது என்ற நம்பிக்கையானது பரவலாக உள்ளது, இதனால் மக்கள் அவர்களுடைய கையில் சட்டத்தை எடுக்கக்கூடாது என்று கூறினார்.
வடமாநிலங்களில் மாட்டிறைச்சி பெயரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.