மோசமான திரைப்படங்கள் திரையிடப்படுவதால் இளைய சமுதாயம் சீரழந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிமன்றம், இதுகுறித்து மார்ச் 27-இல் தணிக்கை துறையைச் சேர்ந்த அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு, மயிலாடுதுறையைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து, அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி, மாணவியின் தந்தை செளந்தரராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மாணவியை நேரில் ஆஜர்படுத்தினர். அப்போது திரைப்படங்களை பார்த்துவிட்டு, அந்த மோகத்தால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
மோசமான திரைப்படங்களாலும், திரைப்பட மோகத்தாலும் இளைய தலைமுறையினர் சீரழிந்து வருவதாகவும், மாணவ, மாணவியரின் தவறான நடத்தைக்கு திரைப்படங்களும் ஒரு காரணம்.
ஆகையால், இதுதொடர்பாக திரைப்படத் தணிக்கை குழுவின் தலைமை அதிகாரி வரும் மார்ச் 27-இல் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.