FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மத்திய அரசுடனான இணக்கத்தை பயன்படுத்தி மாநிலத்துக்குத் தேவையான திட்டங்களை பெற முயன்றதா எடப்பாடி அரசு : மு.க.ஸ்டாலின்

மத்திய அரசுடன் உள்ள இணக்கத்தைப் பயன்படுத்தி, தமிழகத்துக்கான திட்டங்களை பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி

29 ஜனவரி 2024, 7:56 pm IST
பகிர்:

சென்னை மத்திய அரசுடன் உள்ள இணக்கத்தைப் பயன்படுத்தி, தமிழகத்துக்கான திட்டங்களை பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன் வருவாரா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் என்ன என்பது பற்றியோ அல்லது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தோ செய்தி குறிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. 

முதல்வராக கருணாநிதி இருந்தபோது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த செய்தி குறிப்பை வெளியிடுவது மரபு. 

ஓர் அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கருதும் அனைவருமே அமைச்சரவையின் செயல்பாட்டிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை ஆனால், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு மாநில அரசுடன் இணக்கமாக இருப்பதால் பொதுக்கூட்டங்களில் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்  என்று முதல்வர் தன் அமைச்சரவை சகாக்களுக்கு கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மத்திய அரசுடன் மாநில அரசுக்கு சுமூக உறவு இருப்பதை என்றைக்கும் திமுக வரவேற்கும். ஆனால், தற்போதைய சுமூக உறவைப் பயன்படுத்தி மாநிலத்துக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெற்றிருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மசோதாவுக்கு இன்னும் அனுமதி பெறவில்லை.  இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் 134 படகுகளை இணக்கமான மத்திய அரசு மூலம் வலியுறுத்தி திரும்பப் பெற முடியவில்லை. விவசாயிகளின் பயிர்கடனைத் தள்ளுபடி செய்ய வைக்க முடியவில்லை.

எனவே, மத்திய அரசை விமர்சிக்காதீர்கள் என்ற அறிவுரைக்கு பின்னே பாஜக அரசின் வருமான வரித்துறை சோதனைகளும், அமலாக்கப் பிரிவு சோதனைகளையும் சந்திக்க வேண்டியது வரும் என்பதற்காகத்தானே தவிர மக்களுக்கு இல்லை.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பையும் மத்திய அரசுடன் இருக்கும் சுமூகமான உறவையும் பயன்படுத்தி விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கொளத்தூரில் ஆய்வு:  கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒரு பெண்ணின் இல்லத்துக்கும் நேரில் சென்று, ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments