கோவை: எல்லாவற்றிலும் கையெழுத்து மட்டும் போட சொன்னார்கள். எடப்பாடி அணியின் 122 எம்.எல்.ஏ.க்களும் கொத்தடிமைபோல இருக்கும் சூழ்நிலை உள்ளது என்று சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலையில் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அரசின் கவனக்குறைவே இதற்கு காரணம்.
எடப்பாடி அணியுடன் இணைவதற்கு பன்னீர்செல்வம் ஆர்வமாக உள்ளார். ஆனால், அவருடன் இருக்கும் பதவியில் இல்லாத சில முன்னாள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்தான் இரு அணியும் இணைவதற்கு தடையாக உள்ளனர்.
பன்னீர்செல்வம் அணியின் 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. எனவே, 2 அணிகளும் விரைவில் ஒன்றுசேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுப்போம் என்று கூறிய கனராஜ், சசிகலாவையும், தினகரனையும் எடப்பாடி அணியினர் அனைவரும் கும்பிட்டார்கள். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்றோ கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றோ எம்.எல்.ஏ.க்களும் சொல்லவில்லை.
அதேபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடப்போவதாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களிமும் கேட்கவில்லை.
122 சட்டப்பேரவை உறுப்பினர்களில் நானும் ஒருவனாக அமர்ந்திருந்தேன். அப்போது எல்லாவற்றும் கையெழுத்து போட சொன்னார்கள், போட்டோம். இப்போது முதல்வர் எடப்பாடி அணி சசிகலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்கிறார்கள்.
அவரவர்களுக்கு சாதகமாக ஒரு அணி அமைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். ஆனால், 122 சட்டப்பேரவை உறுப்பினர்களும் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு கொத்தடிமைகளாக இருக்கும் சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது என்று கனகராஜ் கூறினார்.
மேலும், மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி பணிகள் நிறைவேற்ற முடியும். அந்த வகையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துகொண்டால் நல்லதுதான் என்றார்.
கடந்த மாதம் 11-ஆம் தேதி சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு அவரும் சேர்ந்து போராடினார். அப்போது, பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை அமைந்தால் பதவியை ராஜிநாமா செய்வேன் என்றார். மேலும் இடைத்தேர்தல் வந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.