ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடாதது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பேசுவேன் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக எஸ்சி, எஸ்.டிக்களுக்கு செலவிடப்பட்ட நிதி குறித்த அறிக்கையை ஒரு மாதத்திற்கு சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எஸ்.சி, எஸ்.டிக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா எனவும் அறிக்கை தருமாறு கேட்டுள்ளேன். இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக பின்பற்றபடுகிறதா என ஆய்வு செய்தேன். பல்வேறு தரப்பினர் தங்கள்
கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அரியலூர் மாணவி அனிதா ஏற்கனவே பிவிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் இந்த சூழ்நிலையில் அந்த மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அனிதாவை தற்கொலை செய்துகொள்ள யாரேனும் தூண்டினார்களா என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் ஆதிதிராவிடர் இன மக்களுக்கான திட்டங்கள் குறித்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து இடாமல் ஆதிதிராவிட இனமக்களுக்கு எதிராக செயல்படுவதாக வந்த குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து பேசுவேன் என்றார் முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.