புதுதில்லி: தொழிலாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம்.சத்தியவதி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக நேற்று திங்கள்கிழமை (ஏப் 9) பொறுப்பேற்றார்.
அவருக்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் வினய் மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான எம்.சத்தியவதி, 1982-ஆம் ஆண்டு, யூனியன் பிரதேச பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனவர். 35 ஆண்டு கால அரசுப்பணியில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், இஸ்ரோ செயற்கைக்கோள் நிலையம், விண்வெளித் துறை, உறுப்பினர் செயலாளர், மத்திய பட்டு வாரியம், டெக்ஸ்டைல்ஸ் அமைச்சு மற்றும் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் முதல் பெண் தலைமை அதிகாரி, உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். புதுச்சேரி மாநில அரசின் தலைமை செயலாளராகவும் இருந்துள்ளார்.
அவரது பணியிட மாற்றத்தால், காலியாக உள்ள தொழிலாளர் நலத்துறை செயலாளர் பொறுப்பு, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.